Monday, July 03, 2006

மழைத்துளி

பன்னீர்துளிகள்
வேண்டாம் - உன்
வியர்வைத்துளிகள்
போதும் - அது
மண்வாசனையை
கிளப்பும்
மழைத்துளி

-பி.எம்.நாகராஜன்

பெருந்தலைவர் காமராஜ் - பகுதி : 1

இந்திய சுதந்திர பொன்விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா சிறப்பு கவியரங்கத்தில் கல்லூரிகள் அளவில் முதல் பரிசினை பெற்று இந்தியவானொலியின் நாகர்கோவில் பிரிவில் ஒலிப்பரப்பப்பட்ட கவிதை.

நான்
குருசேத்திரத்தில்
குருவானவன்
ஜெருசேலத்தில்
கருவானவன்
உன்
முகக்கண்ணுக்கு தெரியாத
மூச்சுக்காற்று நான்
யுகம் தோறும்
முகம் எனக்கு வேறு
நான் ஒன்றுதான்
நீ
இந்து எனில்
நான் இஸ்லாம்
நீ
இஸ்லாம் எனில்
நான் கிறிஸ்து

சிந்தித்து சிந்தித்து
சிந்தனை சிக்காகிவிட்டதா?
பேனா
பேமாரித்தனம் செய்கிறது
சிந்தனை
சீமத்தனம் செய்கிறதா?
நீ
கருவாவதற்கு முன்பே
கல்லறையானவனை கவியரங்கின்
கருவாக்கிவிட்டார்களே!
சொல்லிவிட்டால்
கொல்லிமலையும்
இடம்பெயர்ந்து வரும்
இவனை இதிகாசமாக்க
உன்
கவிதைகளா இந்த
காவியணியாதவனை
காவியமாக்கப்போகிறது?
அவன் கோவில்

காமராஜ்
கல்கியின்
பொன்னியின் செல்வன்
இல்லை
குமாரசாமியின்
சிவகாமியின் செல்வன்

கோகினூரிலிந்து
கொள்ளையடிக்கப்பட்ட
வைரம் இல்லை
விருதுப்பட்டியிலிருந்து
வெட்டி எடுக்கப்பட்ட
கட்டித்தங்கம்

தமிழுக்கு
தனியிலக்கணம் தந்த
தொல்காப்பியன்
இல்லை
அரசியலுக்கு
அணியிலக்கணம் தந்த
சொல்காப்பியன்

காமத்துப்பால்
கலவாத திருக்குறள்
இதுவரை
அறத்துப்பாலில் இணையாத
அதிகாரம்

பல்கலைக் கழக
பெயர்ப்பலகை மட்டுமல்ல
காமராஜ் - அவன்
கட்டாயபாடமாக வேண்டிய
பாடத்திட்டம்.

காற்றில்
கரைந்து போகும்
கற்பூரமல்ல
காமராஜ்
கப்பலை கரைசேர்த்த
நங்கூரம்
தமிழனுக்கு
கர்வம் தந்த
கம்பீரம்

எல்லையைத்
தாண்டி வந்து
குமரியின்
தாகம் தீர்த்த
தாமிரபரணி

திருவாசகத்தில்
ஒருவாசகம்கூட
பயிலாத
பெருவாசகம்

இந்தியாவின்
பட்டத்து யானை
அவன்
ஆள்காட்டி விரலில்
பிரதமர்களின்
பட்டியல்
ஆடிப்போகும்

காமராஜ்
வெல்ல முடியாத
வெற்றி
மூழ்க முடியாத
ஆழம்
ஏறமுடியாத
உயரம்
கடக்க முடியாத
தூரம்
கணக்கிட முடியாத
எண்ணிக்கை

அவன்
தொண்டுகளை
அடுக்கினால் அதன்
கொண்டையில்
வானம் தட்டும்
இன்றுவரை
பூமி சுற்றிய
சுற்றுகளின் மொத்தம்
அவற்றைப்
புத்தகமாக்க
இந்த பூமியில்
பதிப்பகங்கள்
பத்தாது
அது
தொட்க்கம் தெரியாத
பூமியின் பாதை
பாதியில் நிற்கும்
பாரதியின்
பாஞ்சாலி சபதம்
மீதியைத் தர
மீண்டும் அவனே
வரவேண்டும்

காமராஜ்
வாடகை வீட்டில்
வாழ்ந்த
கொத்தனார்
மாற்றுத்துணி
இல்லாத
நெசவாளி
கருப்பு நிறத்தில்
கரந்த பால்
ஆறடி உயர
திருவிளக்கு
நடை பாதைக்கும்
வெளிச்சம் தந்த
நகராட்சி
தெருவிளக்கு.

-பி.எம்.நாகராஜன்

Friday, June 16, 2006

எங்கள் நாடு

ராகம்- பூபாளம்

1. மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இதுபோல?
பொன்னொளிர் பார தநாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

2. மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன் யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

3. இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையைவிரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடெ
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

-பாரதியார்

Thursday, June 15, 2006

போகின்ற பாரதமும், வருகின்ற பாரமும்

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

1. வலிமை யற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒ டுங்கினாய் போ போ போ
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலிய ழந்த குரலினாய் போ போ போ
ஒளிய ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினியாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

2. இன்று பார தத்திடை நாய் போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்றி கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்கவாய் போ போ போ

3. வேறு வேறு பாஷைகளை கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ


4. ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றவனை போ போ போ

வருகின்ற பாரத்தை வாழ்த்தல்)

5. ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

6. மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற வஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள், சீர்த்
தேசமிது தோன்றுவாய் வா வா வா

7. இளய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளி யிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த் தன்போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா.

8. வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்குளுய்யவே நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செவ்வாய் வா வா வா

-பாரதியார்

வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பா

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளரந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


-பாரதியார்

Wednesday, June 14, 2006

சுதந்திரம் தாகம்

(தாளம்- ஆதி; ராகம்- கமாஸ்)

1. என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?
என்றெம தன்னகை விலங்குள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை அதரிப் போனே!
வென்றி தருந்துனை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும்வாடுதல் நன்றோ?

2. பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்லென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!

-பாரதியார்

Tuesday, June 13, 2006

தமிழ் நாடு

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே_ இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு_ உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு_ நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு_ தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி_ என
மேவிய யாறு பலவோடத்_ திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே_ நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில்_ நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை_ வட
மாலவன் குன்றம் இவற்றிடையே_ புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு_ புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு_ நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின்_ மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்_ மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி_ அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்_ எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்_ சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார்_ தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம்_ இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

-பாரதியார்

Monday, June 12, 2006

இருபுறம்

என்
ஒருபுறம் அல்ல
மறுபுறம் அல்ல
இருபுறமும் நீதான்
என்னோடு இருக்கும்
உன்னைப் பிரித்தால்
மண்ணோடு மண்ணாகத்தான்
மடிந்து வீழ்வேன்.

- பி.எம்.நாகராஜன்

பாரத தேசம்

பல்லவி

பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்_ மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைகொல்லு வார்

சரணங்கள்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் வீடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்குவோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அÛம்பபோம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்;
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

5. சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

8. பட்டினியில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

9. ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் (பாரத)

10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

11. மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தில் கண்டுதெளிவோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

12. காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப்போம்;
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம்;
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். (பாரத)

-பாரதியார்

Thursday, June 08, 2006

பாரத நாடு

பல்லவி

பாருக்கள்ளே நல்ல நாடு _எங்கள்
பாரத நாடு

சரணங்கள்

1. ஞானத்தி லேபர மோனத்தி லே_ உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

2. தீரத்தி லேபடை வீரத்திலே _நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு _இந்தப் (பாருக்)

3. நன்மையி லேஉடல் வன்மையிலே_ செல்லப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்)

4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கக் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

5. வண்மையி லேஉளத் திண்மையிலே_ மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாதபுலவர்
உணர்வினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

6. யாகத்தி லேதவ வேகத்திலே_ தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ தெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

7. ஆற்றினி லேகனை ஊற்றினிலே_ தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

8. தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே_ கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தோட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

-பாரதியார்

Wednesday, June 07, 2006

கன்னியாக்குமரி

அம்மா!

சிவனுக்கே தன்னைத்தர
தவம் செய்த தாயே!
கார்த்தியாயினியே!
கன்னியாக்குமரியே!

மகளாகப் பிறந்து - என்
மண்ணைப் புகழாக்கினாயே!
கன்னியாக நின்று - உன்
காதலைப் புனிதமாக்கினாயே!

முக்கடலே மகராசி! - உன்
மூக்குத்தி மகிமைக்கு
திறவாமல் வைத்திருக்கும்
நின் கிழக்கு திருநடையே சாட்சி

அம்மா!
சுற்றும் பூமிக்கு - உன்
சுட்டு விரலே அச்சு
கதிரவன் குளிருக்கு - உன்
கார் குழலே போர்வை.
இமயத்தின் வியர்வைக்கு- உன்
இமைகளே விசிறி
கரும்பின் நாகசப்புக்கு - உன்
திருநாமமே இனிமை
ஆகாயம் உறங்க - உன்
அடிநகமே பாய்.

தாலாட்டும் தென்றலில் - உன்
தாய்மை தெரியுதம்மா.
சங்குகள் சிப்பிகளில் - உன்
தூய்மை தெரியுதம்மா
சீறிவரும் அலைகளில் - உன்
சினம் தெரியுதம்மா
கரையிலாக் கடலே - உன்
மனம் தெரியுதம்மா

திருகல்யாண விருந்தின்
அறுசுவை உண்வுகளும்
விதவிதமான மணலானது
விந்தையா! வினோதமா!

அடையவந்த அசுரனை
அடையாளம் தெரியாத
சிறுசிறு துண்டாக கிளித்து
பெருங்கடலில் எறிந்தவளே
பெரிய நாயகியே!

ஜெபமாலை தாங்கிய
ஜெகன்மோகினியே தேவி
உன் தரிசனமே
உலகில் உயிர்களுக்கு
ஜென்ம பலனம்மா!


-பி.எம்.நாகராஜன்

வந்தே மாதரம்

பல்லவி

வந்தே மாதரம் என்போம் _எங்கள்
மாநிலத் தாயை வணங்குது என்போம்

சரணங்கள்

1. ஜாதி மரங்களை பாரோம்_ உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எயதின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே_ அன்றி
வேறு குலத்தின் ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும_ அவர்
எம்முடன் வாழ்த்திங் கிருப்பவர் அன்றோ?
சினத்த ராய்விடு வாரோ?_ பிற
தேசத்தார் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி_ எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?- ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்_ தம்முன்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு_ நம்மில்
ஒற்றமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்_ இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்- பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

-பாரதியார்

Tuesday, June 06, 2006

நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
இருந்ததும் இந்நாடே- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே_ அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே_ இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ?- இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?- 1

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே_ எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே_ அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே_ தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே- இதை
வந்தே மாதரம் வந்மே மாதரம்
என்று வணங்கேனோ?- 2

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே_ அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே- மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே_ பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே_ இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

-பாரதியார்

Monday, June 05, 2006

கண்ணம்மாவின் காதல்

1. காற்று வெளியிடைக் கண்ணம்மா,_ நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;_ அமு
தூற்றினை யொத்த இதழ்களும்- நில
வூறித் ததும்பும் விழிகளும்- பத்து
மாற்றுப்பொன் னாத்தநின் மேனியும்- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்_ எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே _இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!- இந்தக் (காற்று)

2. நீயென தின்னுயிர் கண்ணம்மா_ எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்_ துயர்
போயின, போயின துன்பங்கள்_ நினைப்
பொன்னெக் கொண்ட பொழுதிலே_ என்றன்
வாயினி லேயமு தூறுதே_ கண்ணம்
மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே_ உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!_ என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!_ இந்தக் (காற்று)

-பாரதியார்

கண்ணம்மாவின் நினைப்பு

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி!- கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே, நிகர்த்த சாயற்
பின்னையே!- நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்)

மாரனம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ- கண்
பாராயோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்)

யாவுமே -இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்)

-பாரதியார்

Friday, June 02, 2006

கடல்

ஓடமே - நீ
தவழ்ந்து தவழ்ந்து
நானொன்றும்
தாழ்ந்து விடப்போவதில்லை
உன்னை
தாலாட்டவே - நான்
தண்ணீராக வரம்
வாங்கி வந்தேன்.

-பி.எம்.நாகராஜன்

என் இளையவனுக்கு...

கொஞ்சும் மழலை மொழி
ரசித்திடல் வேண்டும்
கொடும் தீயவர்தம் நட்புதனை
விலக்கிடல் வேண்டும்
அன்பெனும் ஆயுதம் என்றும்
கைதனில் வேண்டும்
வாழ்வுதனில் காதல்
முழுமையும் வேண்டும்
நன்மைக்கு என்றும்
உதவிடல் வேண்டும்
இயற்கையின் ஆற்றல்
அறிந்திடல் வேண்டும்
இறைவனை என்றும்
போற்றிடல் வேண்டும்
நம்பிக்கை என்பது
வாழ்வுதனில் வேண்டும்
முயற்சிகள் என்பது
மேற்கொள்ளல் வேண்டும்
தோல்வியின் காரணங்கள்
அறிந்திடல் வேண்டும்
வெற்றிகள் என்றும்
பெற்றிடல் வேண்டும்
மகிழ்ச்சியுடன் என்றும்
வாழ்ந்திடல் வேண்டும்.

M.ஜகபர் சாதிக்

அம்மாக் கண்ணு பாட்டு

1. பூட்டைத் திறப்பது கையேலே_ நல்ல
மனந் திறப்பது மதியாலே,
பாட்டைத் திறப்பது பண்ணாலே,- இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

2. ஏட்டைத் துடைப்பது கையாலே- மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டையடிப்பது வில்லாலே_ அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

3. காற்றை யடைப்பது மனதாலே_ இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே- உயிர்
துணை வுறுவது தாயாலே. (பூட்டைத்)

-பாரதியார்

Wednesday, May 31, 2006

அழகு

எல்லா அழகும்
மலர்களாய் - அந்த
மலர்கள் எல்லாம்
மழலைகளாய்

கொத்தோடு அழகாய் சில
கூந்தலோடு அழகாய் சில

கனியோடு அழகாய் சில
பனியோடு அழகாய் சில

வண்டோடு அழகாய் சில
தண்டோடு அழாய் சில

நதிச்சோலையில் அழகாய் சில
அதிகாலையில் அழகாய் சில

அர்ச்சனையில் அழகாய் சில
அந்தியில் அழகாய் சில

அல்லி அதிகமாக அழகாய் சில
புல்லி இல்லாமல் அழகாய் சில

செடியோடு அழகாய் சில
நெடியோடு அழகாய் சில

ஒவ்வொன்றும் அழகுதான்
ஆனாலும்
ஒற்றுமைப்பட மறுக்கும்
அழகோடு.

-பி.எம்.நாகராஜன்

நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமலொம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்.- 1

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவமெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்.- 2

இன்னிசை மாத ரிசையுளேன் நான்,
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.- 3

மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்தளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்,- 4

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டபல சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்,- 5

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்,
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்.- 7

-பாரதியார்

Monday, May 29, 2006

அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறவிலிகாள்!- பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?- 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயக்கும் மதியிலிகாள்!_ எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?- 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?- 3

வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.- 4

நாமம்பல் கோடியார் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே_ ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே- 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே_ உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.- 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்_ நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?- 7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே_ இங்கு,
கொள்ளக் கரிய பரிமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்து _பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்_ என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

-பாரதியார்

Saturday, May 27, 2006

மனதில் உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிரே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவமண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்.

-பாரதியார்

அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

அச்சிமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

அச்சிமில்லை அச்சமில்லை அச்சமெனப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கச்கணிந்த கொங்கை மாதர் கணகள் வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நணப ரூட்டு போதனும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சை நுனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

-பாரதியார்

Friday, May 26, 2006

கானல்

வானும் கனல் சொரியும்!- தரை
மண்ணும் கனல் எழுப்பும்!
கானலில் நான் நடந்தேன்- நிழல்
கணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர்- நிழல்
உயிருக் கில்லை அங்கே!
ஆன திசைமுழுதும்- தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா- தெடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால்- அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்!- ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல், செந்தணலில்- கட்டிக்
கந்தக மாய்எரியும்!

முளைத்த கள்ளியினைக்- கனல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய்- இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும்கானல்!- உயிர்
கொன்று தின்னும்கானல்!
களைத்த மேனிகண்டும்- புறங்
கழுத்த றுக்கும்வெளி!

திடுக்கென விழித்தேன்- நல்ல
சீதளப் பூஞ்சோலை!
நெடும் பகற்கனவில்- கண்ட
நெஞ்சுறுத் தும்கானல்
தொடர்ந்த தென்நினைவில்!- குளிர்
சோலையும் ஓடையுமே
சுடவ ரும்கனலோ- என்று
தோன்றிய துண்மையிலே.

-பாரதிதாசன்

Thursday, May 25, 2006

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! (எங்கள்)

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! (எங்கள்)

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூ தூது சங்கே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! (எங்கள்)

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரியைப்போல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
செங்குறுதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! (எங்கள்)

-பாரதிதாசன்

Tuesday, May 23, 2006

உன்னை விலக அல்ல

பிச்சிப் பூவே!
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
முத்தங்களால் உன்னை
எச்சில்படுத்திப் போகும்
காற்றை முகர்ந்துபார்
என் மூச்சின்
வாசனைதான் வீசும்

நான்
உன் வீட்டு முற்றம் தான்
சின்னச் சின்ன கோலங்களால்
என்னைச் சிங்காரிக்காவிடிலும்
பள்ளங்கள் தோண்டி - என்
உள்ளத்தைப் புண்ணாக்காமல்
இருந்திருக்கலாமே!

எரிவாயுவினால் என்னை நீ
எரித்துக் கொன்றாலும்
கடுகடுவென என்னை நீ
கரித்துக் கொட்டினாலும்
உன்னை விலக அல்ல
உலகை விலகவே
விரும்புகிறேன்.

-பி.எம்.நாகராஜன்

நான் மலர்வேன்

நீ
தொலைவில் வரும்போது
நான்
பக்கப்பார்வை அற்றவன்.

என்னை
தொட்டுக் கொண்டிருக்கும்போது
எப்போதும்
தூரப்பார்வை அற்றவன்

அருகே இருந்தால்
அமிர்தமும் தெவிட்டுமாம்
தென்றலே! - நீ மட்டும்
தெவிட்டாமல் இருப்பது
எப்படி?

அந்த ஆதவனால்
ஆயிரம் பூக்கள்
மலரலாம்.

உன்னால் மட்டுமே
நான் மலர்வேன்.

- பி.எம்.நாகராஜன்

தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதாழல்- மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலர் சிலிர்ப்பால்- கருங்
கண்மலரால் முல்லை வெணணகைப்பால்
அமையும் அன்னங்களின் மென்னடையால்- மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி- அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே- நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள்- என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம்- நல்ல
தோகையர் கூட்ட மெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே- வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

-பாரதிதாசன்

Monday, May 22, 2006

இணையம் உலகை இணைக்கும்

இணையம்;
கனவா, வியப்புதிர்த்திடும் புதிரா?
இல்லை இல்லை, ஆறறிவு விலங்கினத்தின்
அற்புத படைப்பு.

அனல் பறக்கும் கோடையிலும்
குளு குளு அறையில் - ஜில்லென்றிருக்கும்
கால தேவனின் அற்புத குழந்தை.

பன்னீரில் பழரசத்தில் - தவழ்வாரும்
கண்ணீரில் வேர்வையூற்றில் - மிதப்பாரும்
அன்புடன் விரும்பும் குழந்தை.

கிளைகள் யாவும் மாநிலமாய் - அதன்
விழுது யாவும் நாடுகளாய் - வளர்ந்தது
நம் இணையம்.

விளையாட்டா?
பொருளீட்டி பல்வகையில் - செலவிடும்
தவணை முறை வாணிகமா?
கை தேர்ந்த மருத்துவமா?
அல்லது
அது ஓர் சுவை மிக்க இலக்கியமா?
அத்தனையும் வளம் பெறும்
சிறப்பான இணையத்தால்...

பாரதியையும் ஷெல்லியையும் - இணைக்கும்
இன்ப ரதம் அது - தமிழ் வள்ளுவனை
தரணியெல்லாம் உலவ செய்யும்
இந்திய காந்தீயத்தை - இங்கிலாந்தில்
பேசச் செய்யும்.

காதல் எனும் காவியத்தை - கடல் கடந்து
ஏற்படுத்தும் - காதல் சின்னமாய் - தாஜ்மஹாலை
கனடாவிலும் ரசிக்க செய்யும்.

ஏழு கடலுக்கு அப்பாலும் - எளிதாக
பொருள் சேர்க்க செய்யும்.
இமையச்சாரலில் ஒருவன் - எண்ணம்
ஆல்ப்ஸ் சாரலிலும் எதிரொலிக்கும்.

பிற நாட்டு கலைகளை அறிந்திட செய்யும்
புத்தம் புது கலைகள் - நித்தம்
வளர்ந்திடும் எங்கும்.

நிறமும் மொழியும் தடை - உலகில்
கடல் என்பது பிரிக்கும் படையென்ற - பழமைக்கு
கல்லறையமைத்த இணையம்.

உடையில் மாற்றம் - உண்ணும்
உணவில் மாற்றம் - வாழ்க்கை
நடையினால் மாற்றம் - வாழும்
நாட்டினால் மாற்றம் - எனினும்
மானுட அறிவை - மாட்சியுற
செய்யும் இணையம்.

உதவிகள் புரிய உறு துயர் களைய
உயிரியம் எனும் சமநெறி வளர - உதவும்
இணையம் எதிலும் சிறப்பே.

உலகின் ஆதாரம் சூரினனே - எங்கும்
ஒருசேர தெரிவதில்லை - மனிதன்
படைத்த இணையமோ
உலகின் பாலம் என்றுமே!!!

- ஜஹபர் சாதிக்.M

ஒன்றும் இல்லை

கடலே - உனக்குள்
காணாமல் போன
காவிரியாறு நான்.

என்னையில்லை என்றாலும்
இன்னொருவரை நீ
என்றாவது ஒருநாள்
உண்மையாக நேசிப்பாய்
அப்போதாவது உணர்வாய்
அல்லவா!

உன் சாதாரணங்கள்
எனக்குத் தந்த ரணங்களை.

உன் பிடிவாதங்கள்
எனக்கு தந்த அடிகளை

காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு
ஒன்று தெரிகிறது - நான்
உன் குஞ்சு இல்லை

விலகிக் கொள்கிறேன்
விலகி விடு
விட்டு விடு
உனக்கும் எனக்கும்
ஒன்றும் இல்லை

-பி.எம்.நாகராஜன்

தமிழன்

பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன்- தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்- பிறக்கும் போதே...

இறப்பதே இல்லை தமிழன்- புகழுடம்பை
எங்குமே வைத்தது காண்க

மறக்குமா வையம் தமிழன்- மனப்பாங்கு
வளர்த்த அறத்தையும் அறிவையும்?
சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்- பிறக்கும் போதே...

முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல்மொழி தமிழ் மொழி- ஆதலால்
புதுவாழ் வின்வேர் தமிழர் பண்பாடே- பிறக்கும் போதே...

முதுகிற்புண் படாதவன் தமிழன்- போர்எனில்
மொய்குழல் முத்தமென் றெண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்- பிறக்கும் போதே...

-பாரதிதாசன்

Saturday, May 20, 2006

தமிழ் உணவு

ஆற்றங் கரைதனிலே_ இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றிலுட் கார்ந்திருந்தேன்_ வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர்_ வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார்_சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)

நாட்டின் நிலைபேசிப்_ பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஒர் புறம்
ஒட்டம் பியின்றிடுவார்_ நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச்_ செய்த
குத்துவிளக்சினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே_ மண்ணை
அள்ளுவர், வீழுவர், அம்புலிவேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)

புனலும் நிலாவொனியும்- அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந்- தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்!
தனிஒரு வெள்ளிக்கலம்_ சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்!
போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)

விந்தை உரைத்திடுவேன்_ அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள்_ அது
முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே_ மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்?_ கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன (ஆற்றங்கரையினிலே)

பொருளற்ற பாட்டுக்களை_ அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின்_ திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ_ மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச்சொல்- ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங்கரைதனிலே)

சங்கீத விற்பனனாம்_ ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே_ சுவை
அத்தனையும் கண்டுவிட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே_ நன்று
நன்றென ஆர்ப்பரித்தார், அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில்_ஓர்
இன்பநறுங்கவி கேட்டது காதினில் (ஆற்றங்கரைதனிலே)

அஞ்சலை உன் ஆசை_ என்னை
அப்புறம் இப்புறம் போகவிடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய்_ நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!_ என்ற
வண்ணத் தமிழ்ப்பாதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும் வானத்தையும்- குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும் (ஆற்றங்கரைதனிலே)

ஒன்றெனச் செய்ததுவே!_ நல்
உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்!
நன்று தமிழ் வாளர்க_ தமிழ்
நாட்டினிலே எங்கணும் பல்குக! பல்குக!

என்றும் தமிழ் வளர்க_ கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல்_ தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! (ஆற்றங்கரைதனிலே)

-பாரதிதாசன்

Friday, May 19, 2006

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்.
பனி மலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்_ தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும்- ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியம்,
குழலிடை வாய்க்கும் இசையும்- வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும்_ பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும் தமிழும்_ நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்.!

பயிலுறும் அண்ணன் தம்பி_ அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை,_ என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள்_அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம்_ தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்

நீலச் சுடர்மணி வானம்_ ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம்_ ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும்_ நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர்,_ தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும்_ பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை_கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு_ கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!, உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

-பாரதிதாசன்

Thursday, May 18, 2006

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்!_ அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள்உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்றுபேர்!_ இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்!_ இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதவென்று பேர்!- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!_ இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!- இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்_ இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

--பாரதிதாசன்

Tuesday, May 16, 2006

முத்து மாமா

புதுக்கோயில் மதில்மேலே முத்து மாமா- இரண்டு
புறாவந்து பாடுவதேன் முத்து மாமா?
எதுக்காகப் பாடினவோ முத்து மாமா- நாமும்
அதுக்காகப் பாடுவமே முத்து மாமா.
ஒதுக்கிடுமா ஆற்று நீரைக் கடல் வெள்ளம்-என்னை
ஒதிக்கிவைக்க எண்ணலாமா முத்து மாமா?

முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா?
ஓதிய மரத்தின் கீழே முத்து மாமா- கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்து மாமா?
எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா.
குதி குதியாய்க் குதித்துண்டு முத்து மாமா- எனக்குக்
குழந்தையில்லை ஆனாலும் முத்து மாமா
எதிலும் எனக்கதிகாரம் முத்து மாமா- நீதான்
எப்போதுமே என் சொத்து முத்து மாமா!

-பாரதிதாசன்

Monday, May 15, 2006

நீ எனக்கு வேண்டும்

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்குப் புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும்- என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்!

மீனுக்கு பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப்பபுலி வேண்டும்- என்
கண்ணாட்டியே நீ எனக்கும் வேண்டும்!

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்கு தேன் வேண்டும்
தோளுக்குப் பூமாலை வேண்டும்-அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்!

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும்
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!

-பாரதிதாசன்

Saturday, May 13, 2006

சாவை நீக்கு

கண்டவுடன் காதல் கொண்டேன் உன்மேலே- நீ
கண்வைக்க வேணுமடி என்மேலே
அண்டினேன் ஆதரிக்கக் கையோடு- கேள்
அதுதானே தமிழர்கள் பண்பாடு!

கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே- எனைக்
கூட்டிக்கொள் உன் இடுப்பின் ஓரமே
நொண்டியின் கைம்மேல் வந்தா விழும்?- என்
நோய் தீர்க்கும் சேலத்து மாம்பழம்!

அழகில் ஆருமில்லை உன்னைப் போல் -உன்மேல்
அன்பு கொண்டவன் ஆருமில்லை என்னைப்போல்

இழைக்க இழைக்க மணம் கொடுக்கும் சந்தனம்- மனம்
இனிக்க இனிக்கப் பூப்பூக்கும் நந்தவனம்!
பழுக்க பழுக்க சுவை கொடுக்கும் செவ்வாழை
பறிக்கும் போதே மணம் கொடுக்கும் வெண்தாழை
தழுவு முன்னே இன்பந்தரும் பெண்ணாளே- என்
சாவை நீக்க வேண்டுமடி கண்ணாளே!

-பாரதிதாசன்

Friday, May 12, 2006

அனைத்துமானாய் கண்ணா

கீதையாய் நீ வந்து
பாதையானாய் கண்ணா
விதையாய் நின்று - நீயே
சதையானாய் கண்ணா

சொல்லாய் நீ வந்து
கவியானாய் கண்ணா
எல்லாமாய் நின்று - நீயே
புவியானாய் கண்ணா

பனியாய் நீ வந்து
குளிரானாய் கண்ணா
வெண்ணையாய் நின்று - நீயே
வெளிரானாய் கண்ணா

மலராய் நீ வந்து
மணமானாய் கண்ணா
மனமாய் நின்று - நீயே
குணமானாய் கண்ணா

தென்றலாய் நீ வந்து
தொட்டாய் கண்ணா
தீயாக நின்று - என்னை
சுட்டாய் கண்ணா

தூரலாக நீ வந்து
ஈரமாக்கினாய் கண்ணா
தூரமாக நின்று - என்னை
பாரமாக்கினாய் கண்ணா

இடியாக நீ வந்து
தூற்றினாய் கண்ணா
படியாக நின்று - என்னை
ஏற்றினாய் கண்ணா

இரவாக நீ வந்து
தூங்கவைத்தாய் கண்ணா
கனவாக நின்று - என்னை
ஏங்க வைத்தாய் கண்ணா

கரும்பாக நீ வந்து
இனிமையாக்கினாய் கண்ணா
காதலாக நின்று - என்னை
தனிமையாக்கினாய் கண்ணா

கதிராய் நீ வந்து
ஒளிசேர்த்தாய் கண்ணா
கலங்கரையாய் நின்று - என்னை
வழிசேர்த்தாய் கண்ணா

இசையாக நீ வந்து
மயக்கினாய் கண்ணா
இதயமாக நின்று - என்னை
இயக்கினாய் கண்ணா

நிலவாக நீ வந்து
சிரித்தாய் கண்ணா
நினைவாக நின்று - என்னை
எரித்தாய் கண்ணா

கோபமாக நீ வந்து
கொதித்தாய் கண்ணா
சாபமாக நின்று - என்னை
மிதித்தாய் கண்ணா

சோகமாக நீ வந்து
இடித்தாய் கண்ணா
தாகமாக நின்று - என்னை
குடித்தாய் கண்ணா

அம்மாவாய் நீ வந்து
அன்பானாய் கண்ணா - என்
ஆருயிராய் நீ வந்து - எனக்கு
அனைத்துமானாய் கண்ணா

-பி.எம்.நாகராஜன்

தனிமை

எத்தனைபேர்
எனைச்சுற்றி இருந்தாலும்
எனக்குள் நான்
தனியாகத்தான் இருப்பேன்
என்னருகில்
நீ இல்லாதிருந்தால்.

-பி.எம்.நாகராஜன்

காதல்

பெண்மை இலாதவர்க்கு காதல்
ஒருபோதும் வராது
ஏனெனில் காதல் ஈரமானது.

ஆண்மை இலாதவர்க்கு காதல்
ஒத்தும் வராது
ஏனெனில் காதல் வீரமானது

உண்மை இலாதவர்க்கு காதல்
உரிமையும் ஆகாது
ஏனெனில் காதல் வெண்மையானது

-பி.எம்.நாகராஜன்

நினைவிருக்கட்டும்...

தென்றலும் புயலாய் மாறிடலாம் - அந்த
நதியும் உலகை அழித்திடலாம் - ஒரு
சுடரும் உயிர்களை மாய்த்திடலாம் - ஒரு நாள்
நீயும் என்னை விரும்பிடலாம் - அன்பே
மாற்றம் என்பது உடலுக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்குந்தான்!

- ஜஹபர் சாதிக்.M

என்னவளே!

முட்களாய் இருந்த என்னை
மலராய் மாற்றியவள்
கவிதையெனும் காவியத்தை
கடைவிழியில் கற்பித்தவள்
வாழ்க்கையெனும் பாதையை - வெறும்
வார்த்தைகளால் விளக்கியவள்
அன்பென்னும் தோட்டத்தில்
அரசனாக்கியவள் - அவள்
முயற்சிகளின் தோல்வியை
முன்னேற்றமாக்கியவள்
புரியாத புதிர்களை - வெறும்
புன்னகையிலிட்டவள்
பொறுமையெனும் பெரும் குணத்தை
பொக்கிசமாய் தந்தவள்
வெற்றியெனும் சாதனையை
வெல்லமாய் அளித்திட்டவள்.

- ஜஹபர் சாதிக்.M

Thursday, May 11, 2006

உன் எண்ணம் கூறு

பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி- அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி

உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!

ஏழைக்கு வடித்து வைத்த சோறு- பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு

பெருக் கெடுத்த தேனாறு
பெண்ணே உன் எண்ணம் கூறு!

காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா- நீ
கடுகடுப்புக் காட்டவதும் என் மட்டிலா

வேரிலே பழுத்த பலா
வேண்டும் போதும் தடங்கலா?

வீணாகிப் போகலாமா நேரமே- என்னை
விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே

பொறுத்தேன் ஒரு வாரமே
பொறுக்க மாட்டார் யாருமே!

-பாரதிதாசன்

Wednesday, May 10, 2006

நீ இருந்தால்

இதயம் சுமக்கும்
இமயம் ஒவ்வொன்றும்
கங்கோத்திரியாய்
பொங்கிப் பாய்கிறது
நிலவே! என்னருகில்
நீ இருந்தால்.

- பி.எம்.நாகராஜன்

தோழியே சொல்வாய்

காசுபணம் வேண்டாமடி தோழியே- அவன்
கட்டழகு போதுமடி தோழியே
அசை வைத்தேன் அவன் மேலே தோழியே- என்னை
அவனுக்கே அளித்தேனடி தோழியே!

ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே- என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே- நான்
இவ்வுலகுக் கஞ்சேனடி தோழியே!

தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில்- செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர்- நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே!

ஒன்றெனக்குச் செய்திடடி இப்போதே- நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன்- கொஞ்சம்
அன்புதந்து போகச் சொல்வாய் தோழயே!

என்பார்வை அவன் பார்வை தோழியே- அங்கே
இடித்ததுவும் மின்னியதும் சொல்வாயே
தன்அழகின் தாக்கடைந்த என் வாழவில்- அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே!

பொன்னான நாளடியே என் தோழி- ஒருவாய்ப்
பொங்கலுண்டு போகும்படி சொல்வாயே
இந்தாளும் வாழுகின்றேன் தோழியே- அவன்
எனை மறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே!

--பாரதிதாசன்

Tuesday, May 09, 2006

பார் பேசு

நண்பா என்னை பார்க்கக்கூடாது
என்று கூறவில்லை
தப்பான பார்வையில் பார்க்காதே

நண்பா என்னுடன் பேசவேண்டாம்
என்று கூறவில்லை
தப்பான வார்த்தைகளில் பேசாதே


நான் கவிதை எழுதுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன் உள்ளத்தையும் வருணிக்க

நான் வாழுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன்னுடன் வாழவும் கூட

- புன்னகைமன்னன்

கன்னியாகுமரி(பெண்)

பெண்ணின் கருங்கூந்தல் போல்
கரிய நிற மேகங்கள்
அவள் பார்வையில் இருந்து வரும் ஒளி போல்
வானவில் ஒளிகதிர்கள்
அவள் சிரிப்பொலி போல்
சிலு சிலுவெனெ பொழியும் மழை
அவள் செவ்விதழ் போல்
மாலையில் காணும் செவ்வானம்
அவள் இடை போல்
வளைந்து நெளிந்த மலை பகுதிகள்
அவள் முக பொலிவு போல்
எங்கும் காணும் இயற்க்கை வனப்புகள்
இது அத்தனையும் ஒருங்கபெற்றது
கன்னியாகுமரி(பெண்) மாவட்டம்

-புன்னகைமன்னன்

நான் என்னை வெறுத்து விட்டேன்

நீ என்னை பார்ததால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னுடன் பேசியதால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னுடன் பழகியதால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னை விரும்பிய போதுக்கூட
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னிடம் இல்லை என்று கூறும் போதும்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னை மறந்துவிடு என்றதும்
நான் என்னை தானாக வெறுத்து விட்டேன்

-புன்னகைமன்னன்

குட்டி நிலாவும் வட்ட நிலாவும்

வட்ட நிலா:

குட்டி நிலாவே குட்டி நிலாவே
எங்கே வந்தாய் குட்டி நிலாவே?

குட்டி நிலா:

வட்ட நிலாவே வட்டநிலாவே
வந்தேன் உன்னிடம் வட்ட நிலாவே
கெட்ட உலகம் வாழும் வழியைக்
கேட்க வந்தேன் வட்ட நிலாவே

வட்ட நிலா:

எட்ட இருக்கும் வட்ட நிலா நான்
எனக்கா தெரிய குட்டி நிலாவே?

குட்டி நிலா:

வளர்ச்சி பெற்றாய் குளிர்ச்சி பெற்றாய்
வட்ட நிலாவே வாய் திறவாயோ?

வட்ட நிலா:

தளர்ச்சி பெற்றது தட்டை யுலகம்
சண்டை பிடித்தது குட்டி நிலவே.

குட்டி நிலா:

களைப்பு நீங்க உலகம் ஒருவன்
கைக்குள் வருமோ வட்ட நிலாவே?

வட்ட நிலா:

இருப்பு மிகவும் இருக்கும் ஊரில்
அரிசி உண்டோ குட்டி நிலாவே.

குட்டி நிலா:

ஆயிரங் கோடிச் செலவில் வந்தேன்
அறிவைக் கொடுப்பாய் வட்ட நிலாவே

வட்ட நிலா:

ஆயிரங் கோடியை அரிசிக்காக
அளித்ததுண்டா குட்டி நிலாவே
போய்விடு போய்விடு குட்டி நிலாவே!
போய்விடு -என்றது வட்ட நிலாவே
தீயில் எரிந்தது குட்டி நிலாவே;
தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே

-பாரதிதாசன்

Friday, May 05, 2006

தென்றல் செய்த குறும்பு

இழுத்திழுத்து மூடுகின்றேன் எடுத்தெடுத்துப் போடுகின்றாய்
பழிக்க என்றன் மேலாடைத் தென்றலே- உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே
சிலிர்க்க சிலிர்க்க வீசுகின்றாய்
செந்தாழை மணம் பூசுகின்றாய்
குலுங்கி நடக்கும் போதிலே என் பாவாடை- தலைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே
வந்து வந்து கன்னந் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்தமிட்டாய்
செந்தாமரை முகத்திளை ஏன் நாடினர்- ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்
மெலுக்குமெல் குளிரைச் செய்தாய்
மிகமிகமிக் களியைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை
வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் என் தென்றலே

-பாரதிதாசன்

Thursday, May 04, 2006

தனித்தனி அல்ல

உன்னை
ஒட்டி ஓட்டி இருந்தாலும்
எதுவும் நீயும்
ஒன்று அல்ல
வேறு வேறுதான்
நாம்
தள்ளித்தள்ளி இருந்தாலும்
தனித்தனி அல்ல
ஒன்றுதான்.

-பி.எம்.நாகராஜன்

மயில்

அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சும் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயிலிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!

உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல்உன் தனிக்கொத்து! ஸபாஷ்! கரகோஷம்!

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
இவைகள் என்னை எடுத்துப் போயின!

இப்போது, என் நினைவு என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்;
நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்!
நிசம்அது! நிசம்! நிசம்! - நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ,
கறையொன் றில்லாக் கலாப மயிலே,
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,
மனதிற் போட்டுவை, மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற்காக!

புவிக்கொன்றுரைப்பேன்; புருஷர் கூட்டம்,
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!

-பாரதிதாசன்

Wednesday, May 03, 2006

காடு

முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்!
முட்டுகருங் கற்களும்நெருங்கும்-மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்தடுங்கும் உள்
நடுங்கும்


கிட்டிமர வேர்கள்பல கூடும்- அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும்- பாடி
மட்டையசை வால்புலியின்
குட்டிகள் போய்த் தாய்புலியைத்
தெடும்- பின்
வாடும்.

நீள் கிளைகள் ஆல்விழுதி னோடு -கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு- கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால் கழற்றிப் பாயவருங்
காடு -பள்ளம்!
மேடு!

கோளாடும் கிளம்பிவரும் பன்றி- நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி- மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி
குன்றில்- புகும்
ஒன்றி

வானிடைஓர் வானடர்ந்து வாறு- பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல
தேனடை சொரிந்ததுவிம்
தென்னை மரம் ஊற்றியதும்
ஆறு- இன்பச்
சாறு!

கானிடைப் பெரும்பறவை நோக்கும்- அது
காலிடையே காலிகளைத் தூக்கும்- மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும்- அடை
ஆக்கும்.

-பாரதிதாசன்

Tuesday, May 02, 2006

எல்லாம் நீயே

ஆல் இலையில்
கால் கடிக்கும் கண்ணா

மண்ணையும் வெண்ணையும்
என்னையும் தின்பவனே கண்ணா

குயிலோசை குழலோசை
உயிரோசை நீயே கண்ணா

எனக்குப் பிடித்த

நீல வண்ணம் நீ
நிலையான காதல் நீ
படிக மாலை நீ
பாரதிப் பாடல்கள் நீ
குறும்புகள் நீ
குழந்தைத்தனம் நீ
அலைகடல் நீ
ஆனந்த தாண்டவம் நீ

எனக்குப் பிடித்த

வெள்ளைத் தாமரை நீ
வினாயகர் பொம்மை நீ
இளநீர் நீ
இசைத்தொகுப்பு நீ
காட்டு அருவி நீ
சிட்டுக் குருவி நீ
படகு சவாரி நீ
பனிச் சாரல் நீ

எனக்குப் பிடித்த

நகைச்சுவை நீ
நவராத்திரி கொலு நீ
சுவையான உணவு நீ
சிற்பங்கள் நீ
கலாச்சாரம் நீ
கவியரங்கம் நீ
முத்தங்கள் நீ
முழு நிலவு நீ

எனக்குப் பிடித்த

தியாகராசர் ஆராதினை நீ
திருமலை உற்சவம் நீ
வேடிக்கை விழையாட்டு நீ
வேதங்கள் மந்திரங்கள் நீ
ஆங்கில இலக்கியம் நீ
அழகான சோலை நீ
மழைச் சாரல் நீ
மனித நேயம் நீ

என்
திமிர் நீ
தன்னம்பிக்கை நீ
தன்மானம் நீ
உண்மைகள் நீ

என்
அம்மா நீ
குழந்தை நீ
சொந்தம் நீ
உலகம் நீ
எனக்கு
எல்லாம் நீயே
கண்ணா.

-பி.எம்.நாகராஜன்

குழந்தை

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வாழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவையத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மழலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட்டோமோ?
செம்பவழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்று! சிரித்து வானமே!

-பாரதிதாசன்

Friday, April 28, 2006

தேடல்

என்றென்றும்
என் விழிகளின்
தேடலுக்கான அர்த்தம்
தேவதையே!
நீ மட்டும்தான்

உன் சுட்டு விரல்களில்
இந்த பூமி
முட்டி முடிக்கட்டும்
தன் இறுதி சுழற்சியை

-பி.எம்.நாகராஜன்

ஊர்சுற்றி

சூரியனே! இந்த பூமி
தன்னைத்தானே சுற்றினாலும்
உன்னைத்தானே சுற்றுகிறேன்
இவர்களின் ஒரு நாள் பார்வைக்கு
நான் ஒரு ஊர்சுற்றி
ஆனால் என் வருட பார்வைக்கு
நான் ஒரு உன்னைச்சுற்றி

-பி.எம்.நாகராஜன்

Thursday, April 27, 2006

பனித்துளி

காலைக் கதிரவனைக்
காணும் போதெல்லாம் - என்னை
புறக்கணிக்கும்
பூவே உன் மீது
பனித்துளி எனக்கு
இனியென்ன வேலை?

-பி.எம்.நாகராஜன்

இல்லம்

செல்வமே!
என் உடலின்
ஒவ்வொரு செல்லும்
உன் இனிய இல்லம்

உன் விரல்கள்
அரைத்துத் தருமானால்
அரளி விழுதும் எனக்கு
அடை பாயாசம் தான்.

- பி.எம்.நாகராஜன்

Wednesday, April 26, 2006

தமிழ்

நீ
முத்தமிழும் இல்லை
முதல் தமிழும் இல்லை
என் மூச்சுத் தமிழ்

நீ
ஊடல் தமிழும் இல்லை
கூடல் தமிழும் இல்லை
என் தேடல் தமிழ்.

நீ
செந்தமிழும் இல்லை
சுந்தரத்தமிழும் இல்லை
என் சொந்தத் தமிழ்

எனக்கு என்னை
வெருக்கத் தெரியும்
உன்னை மறக்ககூட
தெரியாது.

- பி.எம்.நாகராஜன்

Tuesday, April 25, 2006

அனுமதிக்காதே

நீ சூரியன்
நான் பூமி
உன் பார்வையிலிருந்து
மறையும் போது
இருளாகத்தான்
இருப்பேன்.

நீ நிலா
நான் நீரோடை
என்னில் மட்டும் தான்
நீ தெரிவாய்.

நீ என் சுவாசம்
என்னைத் தவிர
உன்னைத் தழுவ வருவது
ஆண்டவன் என்றாலும்
அனுமதிக்காதே.
தயவு செய்து
தவிர்த்து விடு.

- பி.எம்.நாகராஜன்

Monday, April 24, 2006

அநியாயம்

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா!

- படித்ததில் பிடித்தது

Thursday, April 20, 2006

கவிதை

மழைத்துளி தன்னைத்தருமெனில்
வயல்வெளி கவிதை
பனித்துளி தன்னைத்தருமெனில்
புல்வெளி கவிதை
நிலவே! உன்னைத்தருவாயெனில்
வானம் நானும் கவிதைதான்

- பி.எம்.நாகராஜன்

Wednesday, April 19, 2006

அன்பே..

அன்பே..
உன் கண்கள்
என் செயல்களை பார்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் கைகள்
என் கற்பனைகளை வரைகையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் கால்கள்
என் வெற்றி பாதையில் நடக்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் முகத்தை
என் இதயக் கண்ணாடியில் பார்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் காதுகள்
என் இனியவைகளை கேட்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் வார்த்தைகள்
என் மனதை குளிர செய்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் உதடுகள்
புன்னகை பூக்களை உதிர்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் நினைவுகள்
என் சிந்தனையை சீர்படுத்தினால்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் பொன்மொழிகள்
என் வாழ்க்கையில் திருப்புமுனையானால்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
என் இதயத்தின் இடைவெளியில்
இயல்பாய் இருக்கையில்
அன்பே நீ அழகு தான்.
ஆயிரம் முறை சொல்வேன்,
அன்பே நீ அழகு தான்!!!

- ஜஹபர் சாதிக்.M

Tuesday, April 18, 2006

ஒட்டாதே

காதலியே
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை
ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு
அவர்கள் ஓங்கிக் குத்துவதைத்
தாங்க முடியவில்லை

- படித்ததில் பிடித்தது

Monday, April 17, 2006

மேகம்

ஏன் அழுகிறாய்?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலேயே
மழையாக
கரைந்ததற்காகவா!...

- படித்ததில் பிடித்தது

Thursday, April 13, 2006

பாரதம்

ஒவ்வொரு நாளும்
விடியலின் போதும்
நம் இந்தியா
நான் இந்தியன்
நம் மக்கள் இந்தியர்கள்
என்ற உணர்வோடு
விழித்திடு

- புன்னகை மன்னன்

இன்ப வாழ்க்கை

கதிரவனின் சிறு கதிர்கள்
சேர்ந்து ஒளி என்னும் வெளிச்சம்
மழையின் சிறு துளிகள்
சேர்ந்து கடல் என்னும் வெள்ளம்
மணல் கற்குவியல்கள்
சேர்ந்து பூமி என்னும் நடைபாதை
உன் சிறு சிறு பார்வை
சேர்ந்து இன்பம் என்னும் வாழ்க்கை

- புன்னகை மன்னன்

Wednesday, April 12, 2006

உயிர்ச்சொந்தமானவளே...

தூரத்துச் சொந்தமென்று தான்
சொன்னார்கள்...
நீயோ-
ஒற்றைப் பார்வையிலேயே
என்
உயிர்ச் சொந்தமானாய்!

நாலு சுவர்
எழுப்பியதும்
நடுப்பகுதி வீடானது...
வந்து போனாய்
கோவிலானது!

ரத்தமில்லாமல்
நான்
உயிர் வாழ்ந்து விட முடியும்..
உன்
சப்தமில்லாமல்
வாழ முடியுமா?

கூப்பிடு தூரத்தில்
குடியிருப்பவள் நீயென்றால்..
சொந்த ஊர் எதுவென்ற
கேள்விக்கு
சொர்க்கமென்று
சொல்லிருப்பேன்!

முட்கள் நிறைந்தது தான்
என்னுடைய பாதை
ஒத்து கொள்கிறேன்..
கூடவே நீ
வருவதென்றால்
ஊசி முள் அத்தனையும்
ஒரே சீராகக் கூட்டி
உனக்கு
அக்குபங்சர் செருப்பாக
ஆக்கித்தர மாட்டேனா?

கனகாம்பரம்
பறித்த போது
காம்பு உடைந்ததற்கே
'அச்சச்சோ...' என்றவள் நீ..
என்
இதயம் உடைந்தது மட்டும்
எதேச்சை என்கிறாய்!

என் தவிப்பு
உனக்கு
சிரிப்பாகக் கூட் இருக்கலாம்..
இருக்கட்டும்
நீ
சிரிப்பதற்காகவேனும்
நான் தவித்துக்
கொண்டிருக்க வேண்டும்!.

நன்றி
க.ச.கலா, நெல்லை

Mobiles

Monday, April 10, 2006

சிப்பி

முத்தே!
என் முதலே!
செல்லமே
என் சேயே! - உன்னை
செதுக்கி வைத்திருக்கும்
சிற்பியல்ல நான்
பதுக்கி வைத்திருக்கும்
பாசமுள்ள சிப்பி
தொப்புள்கொடி அறுத்து
உன்னை பிரிக்கும்போது
அம்மா அல்லடா நான்
அனாதை பிணம்.

-பி.எம்.நாகராஜன்

Saturday, April 08, 2006

மனதில்...

காகிதம் காற்றில்
பறந்து விடும் என்பதற்காக
கல்லை எடுத்து வைத்தேன்
ஆனால்
என் மனதில் உன் நினைவுகள்
பறந்து கொண்டிருக்கும் போது
எதை எடுத்து வைப்பேன்...

- முல்லைவேந்தன்

சிறை

சிறையிலும் வாழ
விரும்புகிறேன் - அது
உன் இதயச் சிறையாக
இருந்தால் மட்டும்.

- பி.எம்.நாகராஜன்

Friday, April 07, 2006

பக்தி

புத்தியால் நீ
புவியை வெல்லலாம்
பக்தியால் மட்டுமே
சக்தியை வெல்ல முடியும்
தெய்வங்கள் மூவரையும்
தூளியில் தாலாட்டியவளே
அத்திரியின் பத்தினி அனுசுயா

காதலே பக்தி
அதற்கென்று ஏதுமில்லை
அதுவில்லாமல் எதுவுமில்லை

புத்தியிருக்குமானால் அது
பக்தியும் இல்லை
ஆதி சிவனை காலால்
மிதித்தவனே கண்ணப்பன்

கற்பு இல்லையானால் அது
காதலும் இல்லை.
தீயிற்கு மதுரையை
தீனி போட்டவளே கண்ணகி

கண்களே புத்தியின் வழி
கண்னில்லாததே காதல்-பழமொழி
தீச்சட்டி ஏந்துவதும்
தீ மிதிப்பதும்
தன்னையே தருவதும்
பக்தி மட்டுமே.

- பி.எம்.நாகராஜன்

அன்பு

திருமறைகள் எல்லாம்
திருத்தமாகச் சொல்கிறது
அன்பே ஆண்டவன்
அனபே அனைத்தும்
அதுவால் முடியாதது
எதுவும் இல்லை

நேசத்தால் வஞ்சிப்பது
சாதரண தவறல்ல துரோகம்
மீதமுள்ள ஜென்மத்திற்கும்
நீ சேமிக்கும் பாவம்
தூரம் நேரம் பார்க்காமல்
துரத்தி வரும் சாபம்.

- பி.எம்.நாகராஜன்

Wednesday, April 05, 2006

பொன்முட்டை

நீலக் கடலே!
நீ என்ன
பொன் முட்டையிடும்
அன்னமா?
ஒவ்வொரு விடியலிலும்
ஒரு புதிய சூரியனைத்
தருகிறாயே !

-பி.எம்.நாகராஜன்

மீன்

உன் நினைவுகளைத்தவிர
வேறொன்றிலும்
நீந்தத் தெரியாத
மீன் நான்

-பி.எம்.நாகராஜன்

Tuesday, April 04, 2006

உன்னைப்போல

மழைக்கு தெரியாது
நம் காதல் ஈரமானது என்று

கடலுக்கு தெரியாது
நம் காதல் ஆழமானது என்று

வானத்துக்கு தெரியாது
நம் காதல் விரிவானது என்று

நிலவுக்கு தெரியாது
நம் காதல் பெளர்ணமி என்று

காற்றுக்கு தெரியாது
நம் காதல் சுகமானது என்று

ஆனால்
உனக்கு தெரியும்
நம் காதல் உண்மையானது என்று

- ஸ்ரீஜித்

படகு

கடல் என்னும் உலகத்தில்
வாழ்க்கை என்னும் படகில்
நீ
ஒரு துடுப்பு
நான்
மற்றொரு துடுப்பு
இதில்
ஒரு துடுப்பை இழந்தாலும்
படகு என்னும் வாழ்க்கை கவிழ்ந்துவிடும்
இன்பம் அதில் தொலைந்து போகும்.....

நீ பாதி
நான் பாதி
என்று பிரிந்திராமல்
நானும் நீயும்
ஒன்று என்று
சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை

- புன்னகை மன்னன்

இருளில் வெளிச்சம்

என் வாழ்க்கை இருளாகும்
என
உன் வாழ்வில் என்னை நீ சேர்க்காவிடில்
நான்
எப்படி என் வாழ்வில் வெளிச்சம் காண இயலும்
ஏனென்றால்
நீ
என் வாழ்க்கை ஆகும்போது
நான்
உன் வாழ்க்கை ஆவேன் அப்போது
உன்
மற்றும்
என்
வாழ்க்கை இருளில் வெளிச்சம்

- புன்னகை மன்னன்

நினைவுகள்

அன்பே!

நிலவானால் வளரும் தேயும் ஆனால்
உன் நினைவுகள் வளர்ந்து கொண்டே இருக்கும்

அன்பே!

சூரியன் என்றால் மறையும் எழும் ஆனால்
உன் நினைவுகள் எழுந்து கொண்டே இருக்கும்

அன்பே!

மலரானால் மலரும் உதிரும் ஆனால்
உன் நினைவுகள் மலர்ந்து கொண்டே இருக்கும்

அன்பே!

வாழ்க்கை என்றால் வாழ்வோம் இறப்போம் ஆனால்
உன் நினைவுகள் மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கும்

Monday, April 03, 2006

அன்றில்கள்

கோடி கோடி பறவைகளில் - நான்
கோடிட்டு படித்தது அன்றில்களைத்தான்
அவர்களைப் பயிலாதவரை
எவரும் உயிராவதில்லை
அவர்களை மதிக்காதவரை
எவரும் மனிதராவதில்லை
அவர்களை எழுதாதவரை
நானும் முழுமையாவதில்லை

நீவிர் இணையாக
நீந்தி வரும்போது
இடையில் தாமரைகள்
தடையாக நின்று
உங்களை பிரிக்குமானால்
தற்கொலை செய்வீராமே

கல்லணையால் காவிரியைத்
தாலாட்டினான் அந்தச் சோழன்
சொல்லணையால் உங்களைச்
சீராட்டுகிறேன் இந்தத் தோழன்
உண்மையான அன்புக்கு
உதாரணமான பறவைகளே
களங்கமில்லா காதலுக்கு
கற்பான பறவைகளே
சங்க இலக்கியங்கள்
உங்களுக்கு நாங்கள் தந்த
வேடந்தாங்கல்கள்

நீங்கள் இல்லாமல் போனதற்க்கு
தாமரை தான் காரணமென்றால்
தேசிய மலர் பட்டத்தை
திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்

இருகைகளும் கூடுகின்றன
இருகண்களும் மூடுகின்றன
வண்ங்குகிறேன் உங்களை
வணக்கம்.

-பி.எம்.நாகராஜன்
மின்னஞ்சல்

Tuesday, March 28, 2006

தஞ்சை பெரியகோவில்

என் நெஞ்சுக்குள்
நான் கட்டிய
தஞ்சை பெரியகோவில் நீ
நீ ஏற்படுத்தும் நிழல்கூட
எனக்குமட்டும் தான்
சொந்தம்

-பி.எம்.நாகராஜன்

Monday, March 27, 2006

முத்தமும் யுத்தமும்

என்னை
முத்தமிடுவதும் நீ
யுத்தமிடுவதும் நீ
என்னை
அலங்காரம் செய்வதும் நீ
அலங்கோலம் செய்வதும் நீ
என்னை
சுகமாக்குவதும் நீ
சோகமாக்குவதும் நீ
உன்னால் மட்டுமே
என்னைக்கழுவ முடியும்
உன்னால் மட்டுமே
என்னைத் தழுவ முடியும்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அலைகடல்
நான் உன்கரை

-பி.எம்.நாகராஜன்

Saturday, March 25, 2006

திரும்பிவருவாய்

நான் உன்னை
மறக்கவும் இல்லை
வெறுக்கவும் இல்லை
உன் விருப்பப்படியே
உன்னை பறக்க விட்டிருக்கிறேன்
நீ என்னை
விரும்பிய பறவையானால்
திருந்திய இறக்கைகளோடு
நிச்சயம்
திரும்பி வருவாய்.

-பி.எம்.நாகராஜன்

தோற்றுப்பார்

உன் ஈகோவை எல்லாம்
தூக்கி எரிந்துவிட்டு
உன்னை
உண்மையாக நேசிக்கும்
ஒரு உயிரிடம்
தோற்றுப்பார்
அந்த தோல்வி
சொர்க்கத்தின் சாவி

-பி.எம்.நாகராஜன்

Friday, March 24, 2006

தென்றல்

காலை முதல் மாலை வரை
இதமாக வீசும் ஒரு இனிய கீதம்
காலை இதமாகவும்
மதியம் அனலாகவும்
மாலை பதமாகவும்
இரவு இனிமையாகவும்
வீசும் இன்ப காற்று
என்றும் ஒய்வில்லாத
தீடீரென்று புயலாய்
வீசும் கொடூரம்-புயல்

- புன்னகை மன்னன்

Thursday, March 23, 2006

உன்னை இழந்தால்

நொடிக்கு நொடி மாற
நான் ஒன்றும்
கடிகார முள் இல்லை
உனக்கு மட்டுமே சொந்தமான
உன் நிழல்.
நான் உன்னை இழந்தால்
இந்த பூமி
என்னை இழக்கும்

-பி.எம்.நாகராஜன்

Wednesday, March 22, 2006

உன்னருகில்

எனக்கு - நீ
நானாக தெரிகிறாய்
உனக்கு - நான்
நீயாகத் தெரியும்போது
உன்னருகில்தான் இருப்பேன்
நீயாகவே நான் இருப்பேன்.

-பி.எம்.நாகராஜன்

முயற்ச்சி

முகில்களை
முத்தமிட நினைக்கும்
அலைகள் தான்
கரைகளைக்
கடக்கும்.
முயற்ச்சிகளை
முடிவிலியாக வை.

-பி.எம்.நாகராஜன்

Tuesday, March 21, 2006

என் இனிய பயணம்

காலையில் கதிரவனின்
கனிவில்லா கதிர்வீச்சால் எழுந்து
கிணற்று நீரை இறைத்து
கெளரவமாய் குளித்து விட்டு...

காலை உணவை முடித்து
காலணிகளை மெருகூட்டி
கம்பீரமான நடையோடு
குழந்தைகள் கை அசைத்து அனுப்ப...

நாற்பத்தி ஏழு ஏ பேருந்து அது
நாற்பது நிமிட பயணப் பேருந்து
நால்வரின் இனிய
நற்செய்திகளை கேட்டு...

என்னோடு என் ஊழியர்களும்
என் பாச மிகு மாணவர்களும்
என்னருகில் நின்று கொண்டிருக்க...

வரும் வழியினிலே
வரைகலை வித்தகரை சந்தித்து
வன்முறையில்லா வார்த்தைகளுக்கு
வெள்ளைக் கொடி காட்டி விட்டு...

சீரிய நடையோடு
சிந்தனை சிற்பியாய்
செம்மையாய் என் பணியை
சுதந்திரமாய் செய்திட
புறப்பட்டேன் இன்று!!!

- ஜஹபர் சாதிக்.M

Monday, March 20, 2006

மது

மலிவு விலை அதற்கு பெயர்
மனிதன் அருந்தியதும் அவனுக்கு
மகத்துவமாய் தெரிகிறது
மங்கலமாய் அவன் இருக்கும் வரை...

சாலைகளை சோலைகளாக்கி
சூரியனின் சூட்டில்...
சிலைகளாய் அவன்
சிதறிய உடையுடன்

அருந்திய மதுவினால் அவன்
அவனுக்கே தெரியாமல்...
ராட்டினம் போல்
ரோட்டில் நடக்கிறான்.

குப்பியில் இருந்த குவாட்டரை
குடித்து விட்டு...
குடும்பத்தில் குழப்பத்தை
கச்சிதமாய் காய் நகர்த்தி

மனித மிருகமாய்
மனைவி மக்களிடம்
மல்யுத்தம் செய்து...
மண்டையில் குருதி
மள மள சொட்டச் செய்கிறான்.

டாஸ் மார்க் கணவனுக்கு
டல் அடித்துப் போன மனைவி...
டைவர்ஸ் சொல்ல
நீதிமன்றத்தில் நிற்க்க...

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
லேபிள் ஒன்று ஒட்டி
லாபம் ஒன்று பார்க்கும்
லட்சியவாதிகளே!

உங்கள் லட்சியம் என்ன?
மனிதனை மனிதனாய்
வாழ விட மாட்டோம் என்பதோ?

இளைய சமுதாயமே!
இன்றே உறுதிகொள்!
இது போன்ற இன்னல்களிலிருந்து!
இனியேனும் விடுதலை பெற !!!

- ஜஹபர் சாதிக்.M

Wednesday, March 15, 2006

பார்வை

அடி பெண்ணே
பார்வை என்னும்
புள்ளியை வைத்துவிட்டு
அன்பு என்னும் கோலம்
போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்

அடி பெண்ணே
பார்வை என்னும்
அம்பை எய்து விட்டு
அதற்கு அன்பு என்ற
மருந்து போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்

- புன்னகை மன்னன்

நீ சிந்திய சிரிப்பில்

நீ சிந்திய சிரிப்பில்
என் இதய துடிப்பு
அதிகமானது

நீ பார்க்கும் அந்த
சிறிய பார்வை
என் விடியல்

உன் ஓரபார்வை
எனக்கு பெளர்ணமி
நிலவு

நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பு

நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
தோன்றும் புதுக்கவிதை

உன் ஒவ்வொரு
செயலையும் வர்ணிக்க
நான் நல்ல
கவிஞனும் இல்லை

- புன்னகை மன்னன்

Monday, March 13, 2006

நினைகின்றாய்

நீ நினைகிறாய்
உன்னிடத்தில்
என் நினைவு இல்லை
என்று
ஆனால்
எனக்கு தெரியும்
இருக்கின்றது
என்று

எப்படி என்று
கேட்கின்றாயா?
மழை வருவதை
வானம் காட்டிவிடும்
புயல் வருவதை
மரங்கள் காட்டிவிடும்
அதுபோல்
உன் மனதை
உன் செயல் காட்டிவிடும்

உன் அன்பை
வெளிகாட்ட
மறுக்கின்றாய்
ஏன்?

ஒவ்வொரு நாளும்
அந்த உன் சிரிப்பு
அந்த உன் பார்வை
அது என்றும்
எனக்காக
வேண்டி
மட்டும்
அமைய
எனக்கு சாதகமான
உன் பதிலை
எதிபார்த்து காத்திருக்கும்
உன் செல்லம்

புன்னகை மன்னன்

Wednesday, March 08, 2006

தினமலர் இதழுக்கு நன்றி

தமிழ் குழந்தை இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 25-2-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் - தொடுப்பு

Tuesday, March 07, 2006

காத்திருப்பேன்

பெண்ணே நீ என்னை விட்டு
வெகு தொலைவில் சென்றாலும்
நீ வரும் வழியை நோக்கி
என் இரு கண்களும் காத்திருக்கும்

பெண்ணே காலங்கள் சென்ற பின்
என்னிடம் நீ வரும் போது
என் கண்கள் மட்டுமல்ல என் உயிரும்
உனக்காக என் கல்லறையில் காத்திருக்கும்
Sreejith

Monday, March 06, 2006

சுனாமி

நீருக்கே
நெஞ்சில்
ஈரம் இல்லை என்றால்
யாருக்கு இருக்கப்போகிறது?

- பி.எம்.நாகராஜன்

Monday, February 27, 2006

சிரிப்பு

நீல மேகங்கள்
மழை பொழிவது போல்
உன் சிரிப்பு ஒலி

மாலை நேர
இளம்வெயில் போல்
உன் சிரிப்பு ஒளி

காலை இளம் வெயில்
உன் இனிய பேச்சை
நினைவுக்கு கொண்டு வருகிறது

மதிய வெயில்
உன் கோபத்தை
ஞாபகப்படுத்துகிறது

இருள் சூழ்ந்த இரவு
உன் அமைதியை
உறுதி செய்கிறது

ஸ்ரீராம்

மாறச்சொல்

காற்றில் வரும்
குப்பையாக மாறச்சொல்
மாறுகிறேன்

வானில் வரும்
மழைதுளியாக மாறச்சொல்
மாறுகிறேன்

ஆழ்கடலின் இருக்கும்
அலைகளாக மாறச்சொல்
மாறுகிறேன்

நெருப்பில் இருக்கும்
ஒழியாக மாறச்சொல்
மாறுகிறேன்

நிலத்தில் காணும்
கற்குவியலாக மாறச்சொல்
மாறுகிறேன்

ஆனால் என்னை
வேண்டாம் என்று
மட்டும்
சொல்லாதே
நான்
மாறமாட்டேன்
மடிந்துவிடுவேன்


பெண்ணே
நீ
உச்சரிக்கும் போதுதான்
என் பெயர்
எவ்வளவு
அழகு என்பது

நான் உன்னை
பார்க்கும் போதுதான்
தெரிகிறது
என் விழிக்கு என்ன
பயன் என்பது

Shreeram

என் இனிய குட்டி கவிதை

அந்த வானத்துக்கு நீலா சொந்தம்
இந்த பூமிக்கு மண் சொந்தம்

பூவுக்கு வாசம் சொந்தம்
செடிக்கு வேர் சொந்தம்

நீருக்கு மீன் சொந்தம்
நெருப்புக்கு கனல் சொந்தம்

மரத்துக்கு காற்று சொந்தம்
கனிக்கு விதை சொந்தம்

நான் உனக்கு சொந்தம்
நீ எனக்கு சொந்தம்
எனக்கு மட்டும் சொந்தம்

இப்படிக்கு srijith

Tuesday, February 21, 2006

என் இனிய கவிதை - ஸ்ரீராம்

சுனாமி

சுனாமி
வார்தையில்
ஒரு
விஷம்
பயம்
வந்து
சேரும்
ஒரு
புயல்
நம்மை
தாக்கும்
ஒரு
................

கனவு

ஆயிரம் வீடு கட்டும்
கொத்தனாருக்கு
குடிசை
கட்டும்
கனவு

பல்லாயிரம் முத்துக்களை
அள்ளி எடுக்கும்
மீனவனுக்கு
ஒரு முத்து
எடுக்கும்
கனவு

லட்சம் மூட்டை
நெல் பயிர் செய்யும்
உழவாளிக்கு
ஒரு நேரம்
கஞ்சி குடிக்கும்
கனவு

கோடிக்கு அதிபதியான
பணம் படைத்தவனுக்கு
பகல் முழுவதும்
சந்தோஷ
கனவு

கவிதை

கவிதை எழுதியது இல்லை
ஆனாலும்
கவிதை பிடிக்கிறது
தொடர்ந்து
படித்து கொண்டிருகிறேன்
அவள் கரு விழிகளில்

மலர்கள்

வாழ்க்கை எனும் பூச்சாடியில்
உபயோகமற்ற ஊத்தம் பூவாய்
அல்லாமல் புகழால்
உலகெங்கும் மணக்கும்
பன்னீர் ரோஜாவாய் வாழ வாழ்த்தும்
ஸ்ரீராம்

நீ

நீ என்றால் உன் என்று அர்த்தம்
உன் வாழ்க்கை உன் கையில்
உன் முன்னேற்றம் உன் கையில்
உன் எதிர்காலம் உன் கையில்
மொத்தமாக நீ உனக்கு மட்டும்

ஸ்ரீராம்

Tuesday, January 31, 2006

நாம் ஏன் வெற்றி பெறமுடியாது?

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இன்று டென்னிஸ் வீராங்கனை சான்யா மிர்ஸாவும், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனும் திகழ்வதைப் பார்க்கின்றோம். வெற்றியின் உச்சிக்கு அவர்கள் இன்னும் போகவில்லை. ஆனாலும், அவர்கள் நெம்பர் ஒன் இடத்திற்கு நிச்சயம் வருவார்கள் என்றும், மிகப் பெரிய அளவில் புகழ் பெறுவார்கள் என்றும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், வர்த்தக நிறுவனங்களும் இப்போதே கணித்து விட்டன. இதனை எப்படி கணிக்க முடிந்தது? இதற்கான விடை மிகவும் எளிதானது.

ஏனென்றால், வெற்றிப் பெறப் போகின்ற எவரிடமும், தனித்துவமான அடையாளங்கள் இருக்கும். இந்த அடையாளங்கள், அவர்களிடம் தெரிவதற்கு முன்பாக அவர்கள், இந்த வெற்றிக்காக அவர்கள் உழைத்த உழைப்பு, திட்டமிடல் இவற்றை எல்லாம் அளவிட்டுக் கூறிட முடியாது. தனக்கு என்ன வேண்டும் என்று மனத்தெளிவு முதல் தேவை. தனக்கு என்ன வேண்டும் என்று தெரியாதவர் அதை அடைவது கடினம்.

முடியாது... வாழ்க்கையின் முதல் பாதியை நாம் எப்படி எவ்வளவு சீக்கிரம் கடந்திருக்கிறேhம் என்பதில்தான் இரண்டாவது பகுதியின் வெற்றியே அமைந்திருக் கிறது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி, டாக்டர் ரெட்டி லேபோரெட்ரீஸ், நிறுவனர் ஆஞ்சி ரெட்டி போன்றவர்கள் எல்லாம் தங்களின் சாதனைகளை ஒருநாள் ஒரு பொழுதில் நிகழ்த்தி விடவில்லை. வெற்றி பெற்று விருது பெறும் அவர்களின் சிரித்த முகங்களுக்குப் பின்னே எவ்வளவு சிரமங்கள் இருந்தன என்பதை உலகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வெற்றிகரமான வாழ்க்கை என்பதும் ஒரு திரைப்படம் போன்றதுதான். துவக்கத்திலிருந்தே கதை விறு விறுப்பாக செல்ல வேண்டும். ஒரு திரைப்படத்திற்கு துவக்கம், இடைவேளை, சுபம் என்று இருப்பதுபோல், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இத்தனையும் நிச்சயம் இருந்தே தீரும். ஏனென்றால் வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. திட்டமிட்ட உழைப்பு, சரியான உழைப்பு, உரிய சந்தர்ப்பம் இவைதான் ஒருவரது வெற்றிக்கு காரணமாகின்றன.

பல சமயங்களில் வாய்ப்புகள் கையருகிலேயே இருந்திருக்கும் அடுத்தவர் செய்த பிறகுதான் அடடா... இதை நாமே செய்திருக்கலாமே என்று தோன்றும். நீங்கள் கலந்துகொள்ளப் போகும் போட்டியைக் குறித்த அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாம்தான் தயாராக இருக்கவேண்டும்.

ஜாதகத்தில் 3 கிரகங்களாவது ஆட்சி உச்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள். இதனையொட்டிய ஒரு கருத்தினை தான் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சொன்னார்கள். அதாவது இந்திய ஆட்சித் துறையின் எல்லா என்ஜpன்களும் சரியான வேகத்தில் இப்போது செயலாற்றுகின்றன என்று கூறினார்.

ஒரு காரின் என்ஜின்ன், ஆக்ஸிலேட்டர், பிரேக், கிளெட்ச், ஸ்டியரிங், கியர் என்று எல்லாம் சிறந்த வேலை செய்வதாக இருக்க வேண்டும். வெற்றி என்பது தோல்விகளே இல்லாதது அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைவது என்கிறhர் எட்வின் பிலிஸ். வெற்றி என்பது ஒவ் வொரு போராட்டத்திலும் வெல்வதென்பதல்ல. இறுதிப் போரில் வெல்வதாகும். ஆறுகள் தாங்கள் ஓடும் பாதையில் இங்கும், அங்கும் தடைகள் இருந்தால் சுற்றிப்போகும். ஆனால் செல்லும் திசையை அடைய வேண்டிய இலக்கைத் தவற விடாது. நாமும் வெற்றி பெறுவதில் ஆற்றினைப் போலத்தான் செயல்படவேண்டும்.

தன்னம்பிக்கை இருப்பவனை யாராலும் தோற்கடிக்கவே முடியாது. இரு கைகளைக் காட்டிலும் நம்ப வேண்டியது தன்னம்பிக்கை. வெற்றிக்கும், தோல்விக்கும் பல சமயங்களில் இடைவெளி மிகக் குறைவு. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்துக்கும், வெள்ளிப்பதக்கத்துக்கும் என்ன வித்தியாசம் பல நேரங்களில் ஒரு விநாடிக்கும் குறைவு.

இவ்வளவு செய்தவர் இன்னும் கொஞ்சம், கொஞ்சம் செய்திருந்தால் அவர்தானே முதல் அவருக்குத்தானே தங்கம். உண்மை அதுதான். இறங்கியாயிற்று. வெற்றி பெற்று விட வேண்டும். எதையும் விட்டுவிடக் கூடாது.

உங்களிடம் உள்ளது முழுவதையும் பயன்படுத்துங்கள். வெற்றி உங்களுக்குத்தான். உதாரணமாக 10 கிண்ணங்களை வரிசையாக சுற்றி விடவேண்டும். பத்தும் ஒரே சமயத்தில் சுற்ற வேண்டும். ஐந்தாவது கிண்ணத்தை சுழற்றும் போது முதலாவது கிண்ணம் தனது சுழற்சியை நிறுத்திவிடக்கூடாது.

இந்த பத்து கிண்ணங்கள்.

1. திறமை, 2.ஆரோக்கியம், 3.தொழில் அறிவு, 4. பண பலம், 5.சுயகட்டுப்பாடு, 6. நட்பு வட்டம், 7. கவனம், 8. மாறுதலுக்கு தயாரான மனம்,9. இட மறிதல், 10. சமயோகித புத்தி. இந்த பத்து கிண்ணங்களும் ஒரே சீராக சுற்றி வரும் என்றால் எவரும் நிச்சயம் வெற்றி வீரராகலாம்.

நான் ரசித்து படித்தது

Monday, January 30, 2006

நாகராஜன் கவிதைகள்

1. என் மேல் நேசமில்லாத
காற்று கூட
சுவாசமாய்
எனக்கு வேண்டாம்

2. உனக்காக
இதயத்தில் கட்டிவைத்த
தாஜ்மஹாலை
இறக்கி வைத்தால்
இந்த பூமியில்
நிற்பதற்க்கு கூட
இடமிருக்காது

நன்றி நண்பர் நாகராஜன்