Monday, September 20, 2010

மகாமகம்

தினம்தினம் நான் தேடும்
தேவதை அம்மா - நீ
தேவியர் துதிபாடும்
ஸ்ரீதேவி அம்மா

அதிகாலை பூக்கும்
கதிரவன் அம்மா - முழு
மதிமுகம் பார்க்கும்
நதி நீர் அம்மா

ஆயர் பாடியில்
யசோதை அம்மா - நீ
மீனவர் குடியில்
ஸ்ரீசுதாமணி அம்மா.

புல்வெளி உறக்கம்
பனித்துளி அம்மா - கோடி
மின்மினி பறக்கும்
உன்விழி அம்மா

கார்த்திகையில் தொடங்கியது
புதுயுகம் அம்மா
காத்திருந்து கொண்டாடும்
மாகாமகம் அம்மா

ஆறுகல் மூக்குத்தி
நூறு விண்மீனம்மா - அதைக்
கருணையில் நீராட்டும்
இருகண் மீனம்மா

செவியோரம் சுருள்முடி
சிறுவாணி அருவியம்மா - அதைக்
பூங்கைகள் ஒதுக்குவது
புதுக்கவிதை அம்மா

ஒரு நிறம் அல்ல
கரு நிறம் அம்மா - அது
எல்லாம் கலந்தவுன்
திரு நிறம் அம்மா

மழலைகள் பேசும்
பிழைமொழி அம்மா - அழகு
மயில் கண்டாடும்
மழைமுகில் அம்மா

திருவடியில் அடியார்கள்
ஒருகோடி அம்மா - நிதம்
பதம்தேடி வருவார்கள்
பலகோடி அம்மா

ஆயிரம் பாசுரம்
அலங்காரம் அம்மா - அவை
ரீங்காரம் செய்யும்
ஓங்காரம் அம்மா

ஆதிலிங்கமே சிவன்
ஜோதிலிங்கமே அம்மா - அதில்
பாதிலிங்கமே உமா
பார்வதி அம்மா

வானம் பெருக்கல்
வானம் அம்மா - அதுவுன்
ஞானம் அன்பு
தானம் அம்மா

வாரண ஆரண்யம்
கேரளம் அம்மா - அதன்
தீராப் பெருமைக்கு
காரணம் அம்மா

எல்லோருக்கும் தாயாக
இருக்கும் அம்மா - என்
இல்லத்தில் சேயாக
வருவாய் அம்மா.

-பி.எம். நாகராஜன்

Wednesday, March 31, 2010

நேசிக்க மாட்டாயா?

உன்னை - நான்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.

நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?

-பி.எம். நாகராஜன்

Tuesday, December 08, 2009

நேரமில்லை

உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் ‍-‍ அந்த
வானம் அழுகிறது

ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட‌
நேரமில்லை என்கிறாய்.

-பி.எம். நாகராஜன்

Friday, December 04, 2009

நிலவாக

இரவாக இருந்தாலும்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை

நிலவாக‌
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக‌
நான் வருவேன்.

-பி.எம். நாகராஜன்

Monday, November 23, 2009

சுவாசம்

‍‍மனதோடு
மற்போர்
செய்பவளே!

மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!

நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்

அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்

-பி.எம். நாகராஜன்

Friday, November 06, 2009

நன்றிக் கடன்

ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று

இது எனக்கு
தரப்பட்ட‌
தண்டனையல்ல‌
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.

‍‍ -பி.எம். நாகராஜன்