Wednesday, April 12, 2006

உயிர்ச்சொந்தமானவளே...

தூரத்துச் சொந்தமென்று தான்
சொன்னார்கள்...
நீயோ-
ஒற்றைப் பார்வையிலேயே
என்
உயிர்ச் சொந்தமானாய்!

நாலு சுவர்
எழுப்பியதும்
நடுப்பகுதி வீடானது...
வந்து போனாய்
கோவிலானது!

ரத்தமில்லாமல்
நான்
உயிர் வாழ்ந்து விட முடியும்..
உன்
சப்தமில்லாமல்
வாழ முடியுமா?

கூப்பிடு தூரத்தில்
குடியிருப்பவள் நீயென்றால்..
சொந்த ஊர் எதுவென்ற
கேள்விக்கு
சொர்க்கமென்று
சொல்லிருப்பேன்!

முட்கள் நிறைந்தது தான்
என்னுடைய பாதை
ஒத்து கொள்கிறேன்..
கூடவே நீ
வருவதென்றால்
ஊசி முள் அத்தனையும்
ஒரே சீராகக் கூட்டி
உனக்கு
அக்குபங்சர் செருப்பாக
ஆக்கித்தர மாட்டேனா?

கனகாம்பரம்
பறித்த போது
காம்பு உடைந்ததற்கே
'அச்சச்சோ...' என்றவள் நீ..
என்
இதயம் உடைந்தது மட்டும்
எதேச்சை என்கிறாய்!

என் தவிப்பு
உனக்கு
சிரிப்பாகக் கூட் இருக்கலாம்..
இருக்கட்டும்
நீ
சிரிப்பதற்காகவேனும்
நான் தவித்துக்
கொண்டிருக்க வேண்டும்!.

நன்றி
க.ச.கலா, நெல்லை

Mobiles

1 comment:

Mani said...

மிக யதார்த்தமான, அதே சமயம் ரசிக்கும்படியான கவிதை. மிகவும் ரசித்தேன்.

மணி.