Wednesday, May 10, 2006

தோழியே சொல்வாய்

காசுபணம் வேண்டாமடி தோழியே- அவன்
கட்டழகு போதுமடி தோழியே
அசை வைத்தேன் அவன் மேலே தோழியே- என்னை
அவனுக்கே அளித்தேனடி தோழியே!

ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே- என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே- நான்
இவ்வுலகுக் கஞ்சேனடி தோழியே!

தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில்- செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர்- நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே!

ஒன்றெனக்குச் செய்திடடி இப்போதே- நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன்- கொஞ்சம்
அன்புதந்து போகச் சொல்வாய் தோழயே!

என்பார்வை அவன் பார்வை தோழியே- அங்கே
இடித்ததுவும் மின்னியதும் சொல்வாயே
தன்அழகின் தாக்கடைந்த என் வாழவில்- அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே!

பொன்னான நாளடியே என் தோழி- ஒருவாய்ப்
பொங்கலுண்டு போகும்படி சொல்வாயே
இந்தாளும் வாழுகின்றேன் தோழியே- அவன்
எனை மறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே!

--பாரதிதாசன்

No comments: