Monday, May 29, 2006

அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறவிலிகாள்!- பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?- 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயக்கும் மதியிலிகாள்!_ எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?- 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?- 3

வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.- 4

நாமம்பல் கோடியார் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே_ ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே- 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே_ உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.- 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்_ நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?- 7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே_ இங்கு,
கொள்ளக் கரிய பரிமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்து _பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்_ என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

-பாரதியார்

No comments: