Friday, May 19, 2006

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்.
பனி மலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்_ தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும்- ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியம்,
குழலிடை வாய்க்கும் இசையும்- வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும்_ பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும் தமிழும்_ நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்.!

பயிலுறும் அண்ணன் தம்பி_ அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை,_ என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள்_அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம்_ தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்

நீலச் சுடர்மணி வானம்_ ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம்_ ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும்_ நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர்,_ தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும்_ பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை_கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு_ கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!, உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

-பாரதிதாசன்

No comments: